தொடர் இனவெறித் தாக்குதல் எதிரொலி-ஆஸியிலிருந்து வெளியேறிய 30,000 இந்திய மாணவர்கள்
திருவனந்தபுரம்: ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்தியர்களையும், இந்திய மாணவர்களையும் குறி வைத்து தாக்குதல் நடந்து வருவதால் அங்கிருந்து 30,000 இந்திய மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.
இனவெறித் தாக்குதல், கடுமையான விசா விதிமுறைகள், நிரந்தரமாக தங்க அனுமதி மறுப்பது உள்ளிட்டவை ஆஸ்திரேலியாவிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேற முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள், இனவெறி தாக்குதல் அதிகம் நடைபெறும் மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர்களாவர். இத்தகவலை ஆஸ்திரேலிய இந்திய மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா இனிமேலும் இந்தியர்களின் விருப்ப படிப்பு நாடாக விளங்க வாய்ப்பில்லை. ஒரே ஆண்டில் இந்த அளவு அதிகமான மாணவர்கள் வெளியேறியுள்ளது இதையே காட்டுகிறது என்று மெல்போர்னிலிருந்து வெளியாகும் இந்தியன் ஸ்டூடன்ட் என்ற இதழ் தெரிவித்துள்ளது.