கொடைக்கானலில் நெருப்பு புகையால் மூச்சுத் திணறி தாய், மகன், மகள் சாவு
கொடைக்கானல்: கொடைக்கானலில் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டியபோது, புகையால் மூச்சுத் திணறி தாய், மகன், மகள் ஆகிய 3 பேரும் தூங்கிய நிலையில், பரிதாபமாக உயிர் இழந்தனர்.
தமிழகத்தில் வடமேறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலிலும் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அங்கு கடும் குளிர் நிலவுகிறது. கொடைக்கானல் வாசிகள் மின்சார ஹீட்டர் அல்லது இரும்புச் சட்டியில் கரித்துண்டுகளைப் போட்டு குளிரைப் போக்கிக் கொள்கின்றனர்.
கொடைக்கானல் மல்லிரோட்டில் உள்ள காட்டேஜ் ஒன்றில் வசிப்பவர் சேவியர் (45). சுற்றுலா கார் டிரைவர். அவருக்கு அன்புசெல்வி (35) என்ற மனைவியும், வேளாங்கண்ணி (14) என்ற மகனும், சலேத் ராணி (13) என்ற மகளும் உண்டு.
சேவியர் வெளியூர் சவாரிக்குச் சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவியும், குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். நேற்று முன்தினம் இரவு குளிரைப் போக்க அன்புச்செலவி நெருப்பு மூட்டிவிட்டு தன் குழந்தைகளுடன் தூங்கினார்.
சவாரி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சேவியர் நெடுநேரம் கதவைத் தட்டியும் அவர்கள் திறக்கவில்லை. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர்கள் 3 பேரும் தூங்கிக் கொணடிருந்தனர். சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு அவரது மனைவியும், குழந்தைகளும் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்து கிடந்தனர். இதைக் கண்டு அவர் அதிர்ச்சியில் உரைந்தார்.
இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications