விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு ராஜாவுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையை சிபிஐ மந்த கதியில் நடத்தி வரும் நிலையில் அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் இதை விரைவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் நீரா ராடியாவை அழைத்து விசாரித்த இயக்குநரகம் தற்போது ராஜா மற்றும் அவரது உதவியாளர்களிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறது.
விசாரணைக்கு உதவுமாறும்,ஒத்துழைக்குமாறும் கூறி வெள்ளிக்கிழமையன்று ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாம்.
விரைவில் ராஜாவையும், அவரது உதவியாளர்களையும் அழைத்து அமலாக்கப் பிரிவு விசாரிக்கும் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் கூறுகையில், ராடியாவின் நிறுவனங்களுக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட பண விவரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து பெருமளவில் பணம் வந்தது குறித்தும், அதில் வரி ஏய்ப்பு, அன்னியச் செலாவணி விதிமீறல் நடந்திருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
ராடியாவுக்குத் தொடர்புடைய ஏழு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும், ராஜாவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விசாரித்து வருகிறோம். இதற்காக ராஜாவையும் விசாரிக்கவுள்ளோம்.
வழக்கில் தொடர்புடைய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஐந்துக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மற்ற இரு நிறுவனங்கள் சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. இவை கிட்டத்தட்ட 3000 பக்கங்களுக்கம் மேல் உள்ளன. அவற்றை ஆய்வு செய்துவருகிறோம்.
கடந்த ஆண்டு சிபிஐ ரெய்டு நடத்தி பறிமுதல் செய்த ஆவணங்களை தருமாறும் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் அவர்.