ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது தாக்குதல்: வயிற்றில் கத்திக் குத்து
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் சமையற்கலை படிக்கும் இந்திய மாணவர் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டார்.
கடந்த 5-ம் தேதி தெற்கு யாரா பாரில் வைத்து 31 வயது இந்திய மாணவரை 2 பேர் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர். அவருக்கு வயிற்றி்ல் 26 தையல்கள் போடப்பட்டுள்ளது.
இது குறித்து தனது பெயர் சொல்ல விரும்பாத அந்த மாணவர் கூறியதாவது,
நான் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது லவர்ஸ் வாக்கில் இரவு 11.10 மணி அளவில் என்னை 2 பேர் அனுகினர். என்னிடம் உள்ள பணத்தைக் கொடுக்குமாறு கேட்டனர். நான் பணம் இல்லை என்று கூறியதும் என்னைத் தாக்கினர்.
அதில் ஒருவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி வயிற்றில் குத்தினார். நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம்பிடித்தேன் என்று அவர் கூறினார்.
அவர் தெற்கு யாரா ரயில் நிலையத்தை அடைந்த பிறகே தான் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தார். அங்கிருந்து ஒரு டாக்ஸியில் ஆல்பிரட் மருத்துவமனைக்கு தானாகவே சென்றுள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் ஆஸ்திரேலியாவில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளார். அவர் 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பிறகே இந்தியாவில் இருக்கும் தனது பெற்றோருக்கு இது குறித்து தெரிவித்துள்ளார்.
விக்டோரியா போலீசார் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளை முன் வந்து சாட்சியம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி எம்மா பிரான்கம் கூறியதாவது,
இது ஒரு இரக்கமற்ற தாக்குதல் ஆகும். நாங்கள் அந்த 2 பேரை வலை வீசித் தேடி வருகிறோம். இது இனவெறி காரணமாக நடந்த தாக்குதல் போன்று இல்லை. இது எந்தவித நோக்கமும் இன்றி நடந்தது போன்று இருக்கிறது என்றார்.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. செய்தியைப் படிப்பவர்களும் சரி இன்னொரு தாக்குதல் என்று கூறிவிட்டு தங்கள் வேலையைப் பார்க்கத் துவங்குகின்றனர். இந்த பிரச்சனைக்கு என்று தான் தீர்வு கிடைக்குமோ?












Click it and Unblock the Notifications