நாடாளுமன்ற அமளியை நிறுத்த நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விடக் கோரி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த 12 நாட்களாக நாடாளுமன்றம் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இன்றே அக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஊரில் இல்லாததால் நாளைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜேபிசி விசாரணை தேவையில்லை-காங். கூட்டணிக் கட்சிகள்:
இதற்கிடையே, டெல்லியில் இன்று நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கூட்டணிக் கட்சிகள் கூடி நடத்திய கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஆதரவு தருவதாகவும் கூட்டணிக் கட்சிகள் உறுதிபடத் தெரிவித்தன.
மதிய விருந்துடன் நடந்த இந்த சந்திப்பில் திமுக, தேசியவாத காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ், தேசியமாநாட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இது நடந்தது.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இதில் பங்கேற்றார். பின்னர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், ஜேபிசி விசாரணை கோரிக்கையை கைவிட்டு விட்டு நாடாளுமன்றம் செயல்பட பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும்.
இதுதொடர்பாக நான் நேற்றே கோரிக்கை வைத்தேன். ஆனால் அதை பாஜக உள்ளிட்டவை நிராகரித்துள்ளன. தற்போது அந்தக் கோரிக்கையை மீண்டும் வைக்கிறேன் என்றார்.