தமிழகம் முழுவதும் 50 பொதுக் கூட்டங்கள், 200 தர்ணாக்கள்-சிபிஎம் அறிவிப்பு
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல், தமிழகத்தில் திமுக ஆட்சியின் செயல் திறனற்று போக்கு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பொதுக்கூட்டங்கள், 200 இடங்களில் தர்ணா போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியா இதுவரை கண்டிராத அளவுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பேசப்படுகிறது. கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளை, குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.
திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, தொழிலாளர்கள் விரோத போக்கு என மக்களுக்கு எதிராக சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
இதை கண்டித்து நாடு தழுவிய அளவில் கம்யூனிஸ்டு கட்சி பிரச்சார இயக்கத்தை நடத்த உள்ளது. தமிழ்நாட்டில் டிசம்பர் 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை கூட்டங்களும், 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தர்ணாவும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்கூட்டங்களும் நடத்த உள்ளோம்.
2 லட்சம் துண்டு பிரசுரங்களும் மக்களிடையே கொடுக்க உள்ளோம் என்றார் அவர்.