சிபிஐ புதிய இயக்குநராக ஏ.பி.சிங் பொறுப்பேற்பு-ஐபி புதிய தலைவராக சந்து நியமனம்
டெல்லி: ஐபிஎஸ் அதிகாரி அமர் பிரதாப் சிங் இன்று மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் இன்னும் 2 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார். அதேபோல ஐபி எனப்படும் உளவுப்பிரிவின் புதிய தலைவராக சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிஐயின் இயக்குநராக இதுவரை அஷ்வனி குமார் இருந்து வந்தார்.
தலைவர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான நியமனக் குழு ஏ. பி. சிங்கைத் தேர்வு செய்தது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிங் (58) 1974-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாவார். இதற்கு முன் புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு தலைவராக இருந்தார். மேலும், எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் டைரக்டர் ஜெனரலாகவும் இருந்தார்.
சிங் சிறந்த இந்திய காவலருக்கான பதக்கத்தையும், குடியரசுத் தலைவரின் சிறந்த காவலருக்கான பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
அஷ்வனி குமாரின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி சிபிஐ தலைவராகப் பொறுப்பேற்ற அவர் 2 வருடம், 4 மாதம் இந்தப் பதவியை வகித்துள்ளார்.
மத்திய உளவுப் பிரிவின் புதிய தலைவர் சந்து:
மத்திய உளவுப் பிரிவின் புதிய தலைவராக நேசல் சந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்து 1973-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் அடு்த்த 2 ஆண்டுகளுக்கு மத்திய உளவுப் பிரிவுத் தலைவராக இருப்பார்.
தற்போது மத்திய உளவுப் பிரிவின் சிறப்பு தலைவராக இருக்கும் சந்து வரும் ஜனவரி 1-ம் தேதி தலைவராகப் பொறுப்பேற்கிறார். தற்போதைய தலைவராக இருக்கும் ராஜீவ் மாதுரின் பதவிக் காலம் அடுத்த மாதம் 31-ம் தேதியுடன் முடிகிறது.