ஆந்திராவில் இனி காங்கிரஸுக்கு இருண்ட காலம்தான்-ரோஜா குதூகலம்

தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்தவர் ரோஜா. பின்னர் அவருக்கு கட்சியில் எதிர்ப்பு வலுக்கவே கட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துப் பேசி காங்கிரஸில் சேர முடிவெடுத்தார். எல்லாம் ஒன்று கூடி வந்த நேரத்தில் ராஜசேகர ரெட்டி மரணமடைந்து விட்டார். இதனால் ரோஜாவால் காங்கிரஸில் சேர முடியாமல் போய் விட்டது.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுள்ள சூழலை ரோஜா மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு அவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஏற்னவே அவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஜெகன் மோகனின் யாத்திரையிலும் அவர் கலந்து கொண்டிருந்தார்.
தற்போது ஜெகன் மோகன் ரெட்டி கட்சியில் சேரத் திட்டமிட்டுள்ளாராம் ரோஜா. இதுகுறித்து அவர் கர்னூலில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆந்திராவில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அழிவு காலம் ஏற்படத்தொடங்கி விட்டது. இனி இங்கு காங்கிரசுக்கு இருண்ட காலம் தான். இனிமேல் காங்கிரஸ் தலை எடுக்க முடியாது.
ஆந்திராவில் மேலும் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வர ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கனவு கண்டார். அந்த கனவை ஜெகன்மோகன் ரெட்டியால் தான் கொண்டு வர முடியும். இளம் தலைவர்களில் ஜெகன்மோகன் தனித்துவம் கொண்டவராக திகழ்கிறார்.
தன் தந்தைக்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அவர் ஆறுதல் யாத்திரை நடத்தி சந்திப்பது, இதுவரை யாரும் செய்யாதது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பண உதவி அறிவித்துவிட்டு அவர் இருந்திருக்கலாம்.
ஆனால் ஜெகன்மோகன் அத்தகைய சம்பிரதாய அரசியல் நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். நானும் உங்கள் மகன் தான். என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று செல்போன் நம்பரை கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகி இருப்பதன் மூலம் சரியான, நல்ல முடிவை எடுத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அரசியலில் அவர் வெற்றி பெற வேண்டும் என்றார் ரோஜா.












Click it and Unblock the Notifications