செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை-மீறினால் ரூ. 2 லட்சம் அபராதம்
டெல்லி: செல்போன்களில் வரும் விளம்பரங்கள், விளம்பரம் தொடர்பான அழைப்புகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அப்போதுதான் போய் உட்கார்ந்திருப்போம். படபடவென்று செல்போன் ஒலிக்கும். மடமடவென்று ஓடிப் போய் எடுத்தால், உங்களுக்கு எத்தனை லட்சம் வேண்டுமானாலும் லோன் தர்றோம், வாங்கிக்கிறீங்களா என்று கேட்டு டென்ஷன் செய்வார்கள்.
இப்படிப்பட்ட கால்களால் ஏகப்பட்ட தொல்லைகள். சமீபத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்தபோது அவரை அழைத்த ஒரு வங்கி நிறுவனம், கடன் தேவையா என்று அவரை கத்த விட்டு டென்ஷனாக்கியது.
இந்த தொல்லைகளை தடுக்க வேண்டும் என டெலிபோன் ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் முறையிடப்பட்டது. அதையடுத்து டிராய் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
இனிமேல், டெலிபோன்களில் பேசி விளம்பரம் செய்யக்கூடாது. அதை மீறி செய்யப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
விளம்பர நிறுவனங்களுக்கு தனியாகவும், டெலிபோன் நிலையத்துக்கு தனியாகவும் அபராதம் விதிக்கப்படும். விளம்பர நிறுவனம் முதல் தடவை தவறு செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதமும், 2-வது தடவை செய்தால் ரூ.72 ஆயிரமும் விதிக்கப்படும். 6 தடவை மீறினால் அபராதம் ரூ.2 லட்சமாக உயரும். டெலிபோன் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதே நேரத்தில் நிறுவனங்கள் டெலிபோனில் விளம்பரம் செய்யும்போது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். விளம்பர நிறுவனங்களுக்கு 700-ல் தொடங்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் இருந்து எந்த எண்ணுக்கும் அவர்கள் டயல் செய்து பேசி விளம்பரம் செய்யலாம்.
700 எண்ணில் தொடங்கும் போன் வந்தாலே இது விளம்பர போன் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். எனவே அந்த அழைப்பை ஏற்று பேசுவதாக இருந்தால் பேசலாம். தேவை இல்லை என்றால் துண்டித்து விடலாம்.
புதிய விதியமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.
இனிமேல் நிம்மதியாக உட்கார்ந்து விட்டு வரலாம்.












Click it and Unblock the Notifications