மும்பையில் மகளின் காதலனை அடித்தே கொன்ற தந்தை: மகள் ஓட்டம்
மும்பை: மகளை தனது வீட்டிலேயே வைத்து ரகசியமாக சந்தித்த வாலிபரை தந்தை அடித்தே கொன்றுள்ளார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் உள்ள ஏசிவாரா பகுதியைச் சேர்ந்தவர் அமீர். டாக்சி டிரைவர். இவருடைய 15 வயது மகள் சேத்னா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சதாம் ஷேக்கை (17) காதலித்து வந்தார்.
அமீர் தனது குடும்பத்துடன் 2 அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் கட்டமைப்பு சேத்னாவுக்கு சாதகமாக இருந்ததால் தனது காதலனை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். தந்தை முதல் மாடியில் டிவி பார்த்துக் கொண்டிருக்க, மகள் 2-வது மாடியில் காதலுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
மாடிக்கு வந்த சேத்னாவின் தாயார் நெடுநேரம் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. மேலும், அறைக்குள் பேச்சுக் குரல் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சேத்னாவின் தாய் கணவரிடம் கூறியுள்ளார்.
அவர் வந்து கதவை உடைத்து உள்ளே வந்தார். அப்போது மகளுடன் ஒரு வாலிபர் இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர் சதாமை அடித்து உதைத்துள்ளார். பின்னர் சதாமை கட்டிப்போட்டுவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசார் வந்தவுடன் சதாம் தங்கள் வீட்டில் திருட வந்ததாக புகார் கூறியுள்ளார். போலீசார் காயமடைந்த நிலையில் இருந்த சதாமை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சதாம் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அமீர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உண்மையைக் கூறியுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சேத்னா வீட்டைவிட்டு ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications