ராடியா டேப் லீக்: உள்துறை அமைச்சகம் விசாரணையா?-ப.சிதம்பரம் மறுப்பு
டெல்லி: அரசியல் புரோக்கரான நீரா ராடியாவுக்கும் அரசியல் புள்ளிகள், நிதித்துறையினர், பத்திரிக்கையாளர்கள் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வெளியானது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எந்த விசாரணைக்கும் உத்தரவிடவில்லை என்று அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத் தலைவரான நிரா ராடியாவின் நிதி மோசடிகள் குறித்து ஆராய, அவரது தொலைபேசிகளை வருமான வரித்துறையினர் 3 மாதங்கள் ஒட்டு கேட்டனர்.
அப்போது அவருக்கும் பல்வேறு அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல்களும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நிரா ராடியா தலையிட்டதும், திமுக-காங்கிரஸ் இடையே அமைச்சர் பதவிகள் ஒதுக்குவதில் அவர் தலையிட்ட விவரமும் வெளியானது.
இதுவரை சுமார் 104 தொலைபேசி உரையாடல் டேப்புகள் வரை லீக் ஆகியுள்ளன.
இந் நிலையில் இந்த டேப்புகள் வெளியானதை எதிர்த்து தொழிலதிபர் டாடா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையே இதை லீக் செய்தது யார் என்பது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய உளவுப் பிரிவான ஐபி ஆகியவற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இதை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மறுத்தார். நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்த விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ராடியா டேப் வெளியான விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த விசாரணைக்கும் உள்துறை அமைச்சகம் உத்தரவிடவில்லை. அது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம்தான் விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய புலனாய்வு அமைப்புக்கு உள்துறை உத்தரவிடவில்லை.
அதே நேரத்தில் அரசு ரகசியங்களை வெளியிடும் மத்திய அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சமீபத்தில் அரசு ரகசியங்களை வெளியிட்ட உள்துறை அமைச்சக அதிகாரி ரவிஇந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.
அரசு ரகசியங்களை வெளியிடும் அதிகாரிகள் மீது அரசு கருணை காட்டாது. முறைகேடாக நடக்கும் அதிகாரிகள் விஷயத்தில், அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றார் சிதம்பரம்.
வருமான வரித்துறைக்காக நிரா ராடியாவின் போன் ஒட்டுக் கேட்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் தான் மேற்கொண்டது. எனவே அதை யார் லீக் செய்தது என்ற விவரத்தையும் அந்த வாரியமே விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
ஆனால், போன் ஒட்டுக் கேட்கும் விஷயம் எளிதானதல்ல. இதற்கு வருமான வரித்துறை சார்பில் நேரடி வரிகள் வாரியம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றாக வேண்டும். போன் ஒட்டுக் கேட்பை மேற்கொள்ளவும் அது தொடர்பான பதிவுகளை அழித்தல் ஆகியவற்றுக்கு உள்துறை அமைச்சகத்தின் மிக மிக மூத்த அதிகாரிகள் தான் அனுமதி தந்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications