ராஜபக்சேவின் ஆக்ஸ்போர்ட் வருகையின்போது மாபெரும் போராட்டம்-லண்டனில் குவியும் தமிழர்கள்
லண்டன் போய்ச் சேர்ந்த ராஜபக்சேவுக்கு தமிழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பெரும் 'வரவேற்பு' அளித்து அவரை அதிர வைத்தனர். இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக நாளை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் ராஜபக்சேவுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்த தமிழர்கள் திரண்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு அனுமதிகோரி போலீஸ் தரப்பிடம் போராட்ட அமைப்பாளர்கள் மனு அளித்தனர். அதை போலீஸார் ஏற்று அனுமதியும் கொடுத்து விட்டனர். இதனால் லண்டன் வாழ் தமிழர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையடுத்து போராட்டத்திற்கான ஏற்பாடுகளை படு வேகமாக முடுக்கி விட்டுள்ளனர் தமிழர்கள். லண்டன் நகரமெங்கும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் மின்னல் வேகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஏராளமான வேன்களில் ராஜபக்சேவுக்கு எதிரான பிரசாரம் குறித்த பேனர்களையும் கட்டிக் கொண்டு லண்டனை வலம் வருகின்றனர் தமிழர்கள். மிகப் பெரிய அளவில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் ஒரு தமிழர் கூட விட்டுப் போய் விடக் கூடாது என்ற நோக்கத்துடன் தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழர்களோடு சேர்ந்து இலங்கை முஸ்லீம்கள் மற்றும் சிங்களர்களும் கூட சேர்ந்து கொள்ளவுள்ளனராம். பொன்சேகா கைதால் அதிருப்தியில் உள்ள சிங்களர்களும் ராஜபக்சே லண்டன் வந்தபோது போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல ஆயிரம் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் லண்டனே பரபரப்பாகியுள்ளது. போராட்டத்திற்காக வரும் தமிழர்கள் எந்த வழியாக வர வேண்டும், வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளையும் போராட்டக் குழு தமிழர்களுக்குத் தெரிவித்துள்ளது. இது போக போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தமிழர்களை அழைத்து வர பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.