ஸ்பெக்ட்ரம்: ஜேபிசி விசாரணை கோரி போராட்டம்-ஜெயலலிதா அறிவிப்பு

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்று இருக்கிறது என்று இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையம் ஆகியவை உறுதிபடுத்தியுள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சினிமா டிக்கெட் விற்பனை போல நடைபெற்று இருக்கிறது என்று டெல்லி உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
1,500 கோடி ரூபாய்க்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்கள், ஒரு சில நாட்களில் தங்களது பங்குகளை 6,000 கோடி ரூபாய் அளவுக்கு விற்று லாபம் சம்பாதித்துள்ளன என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா மற்றும் தொலைத் தொடர்புத் துறை செயலாளரிடம் சி.பி.ஐ. ஏன் விசாரணை நடத்தவில்லை என்றும் உச்சநீதிமன்றம் வினவி இருக்கிறது.
ஆனால், கருணாநிதியோ, இதில் எந்தத் தவறும் நடக்கவில்லை, முந்தைய அமைச்சர்கள் என்ன முறையை பின்பற்றினார்களோ அதே முறைதான் பின்பற்றப்பட்டு இருக்கிறது. அனுமானத்தில் சொல்லப்படும் கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை எழுத முற்படுவது முறைதானா? என்றும் வினவி இருக்கிறார்.
இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டுமென்றால், உண்மை வெளிக்கொணரப்பட வேண்டுமென்றால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைப்பதுதான் சிறந்ததாக இருக்கும். இதைத்தான் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் விளைவாக நாடாளுமன்றம் கடந்த 14 நாட்களாக செயல்படாமல் முடங்கியுள்ளது.
எனவே அதிமுக தென்சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 4ம் தேதி சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மருத்துவ அணித் தலைவர் டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் நடக்கும் என்று கூறியுள்ளார்.
15வது நாளாக அமளி-நாடாராளுமன்றம் ஒத்திவைப்பு:
இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுகுழு விசாரணை கோரி 15வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நிலவியது.
இதையடுத்து இன்றும் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற முடக்கத்தால் ரூ. 95 கோடி இழப்பு:
இதற்கிடையே, கடந்த 15 நாட்களாக தொடரும் நாடாளுமன்ற முடக்கத்தால் நாட்டுக்கு இதுவரை ரூ. 95 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications