For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் எதிர்ப்புக்குப் பயந்து ராஜபக்சே நிகழ்ச்சியை ரத்து செய்தது ஆக்ஸ்போர்டு!

Google Oneindia Tamil News

Rajapakse
லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, இலங்கை அதிபர் ராஜபக்சே நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்டது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக யூனியன்.

இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத் தளத்தில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஆக்ஸ்போர்ட் யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவதற்காகவே மகிந்த ராஜபக்சே பிரிட்டன் வந்துள்ளார். ஆனால் அவரது வருகையை பிரிட்டனில் வசிக்கும் தமிழர்கள் கடுமையாக எதிர்த்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பல ஆயிரம் இளைஞர்களும் பெண்களும் இந்த எதிர்ப்பில் பங்கேற்று, போர்க்குற்றவாளி ராஜபக்சே திரும்பிப் போக வேண்டும் என முழங்கினர்.

இதனால் விமான நிலைய பின்வாசல் வழியாக தனது பரிவாரங்களுடன் வெளியேறினார் ராஜபக்சே.

இன்று வியாழக்கிழமை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மன்றத்தில் ராஜபக்சே பேசுவதாக இருந்தது. ஆனால் இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை எதிர்த்து பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பிரிட்டன் தமிழர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக முறையான அனுமதியையும் பிரிட்டிஷ் போலீசாரிடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், ராஜபக்சே பங்கேற்கும் நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும், இந்த ரத்து காரணமாக தாம் வருந்துவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இன்று நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜபக்சே நிகழ்ச்சி பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ராஜபக்சேவை கைது செய்யக் கோரி இன்று பிரமாண்ட ஆர்ப்பாட்டம்...

இதற்கிடையே, போர்க் குற்றவாளியான ராஜபக்சே ஆக்ஸ்போர்டுக்கு வருவதை எதிர்த்தும், அவரையும், இலங்கை ராணுவ அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்யக் கோரியும் பிரிட்டிஷ் வாழ் தமிழர்கள் இன்று பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இதற்கான முறையான அனுமதியை பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது. ராஜபக்சே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும் போராட்டம் தொடரும் என தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

ஆர்ப்பாட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் லண்டன் நகரமெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மேலும், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான பெரிய பேனர்களை தொங்கவிட்டவாறு வேன்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டன்வாழ் தமிழ் மக்கள் மட்டுமின்றி, முஸ்லிம், சிங்கள மக்களும் பங்கேற்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ், சுவிஸ் போன்ற மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களும் பங்கேற்க உள்ளனர்.

பல ஆயிரம் மக்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வருவோருக்காக குறிப்பிட்ட நகரங்களிலிருந்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X