'ராஜபக்சே-சகோதரர்கள் போர் குற்றவாளிகள்': அமெரிக்கா கருத்து, விக்கீலீக்ஸ் தகவல்
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் பாட்ரிஷியா வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு ஜனவரி மாதம் அனுப்பிய ரகசிய கேபிள் தகவலில் கூறியிருப்பதாவது:
ஒரு அரசு தனது அதிகாரிகளும், படைகளும் தங்கள் பதவிக் காலத்தில் செய்த போர்க் குற்றங்களை தானாக விசாரித்ததாக நாம் கேள்விப்பட்டதே இல்லை.
ஆனால், இலங்கைப் பிரச்சனையில் உள்ள சிக்கல் என்னவென்றால் குற்றங்களை செய்தவர்கள் நாட்டின் உயர் அதிகாரிகளாகவும், ராணுவத் தளபதிகளாகவும் இருக்கிறார்கள். இதில் ராஜபக்சே மற்றும் சகோதரர்களுக்கும், எதிர்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கும் பங்குள்ளது.
ராஜபக்சே அரசை எதிர்ப்பவர்கள் திடீர் என்று மாயமாகிவிடுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.
உலகளவில் தமிழர்கள் இந்த பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இலங்கையில் இருக்கும் தமிழர்களோ அரசை கடுமையாக எதிர்ப்பதற்கு இது நேரமில்லை என்றும் கருதுகின்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த தககவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபயா ராஜபக்சே தான் பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருக்கிறார். பொன்சேகா விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவத்திற்கு தலைமை வகித்தார். அவர் அதிபர் தேர்தலில் தோற்றபிறகு கைது செய்யப்பட்டார்.