பிஎஸ்என்எல் ஊழியர் ஸ்டிரைக் வாபஸ்!
கொல்கத்தா: பிஎஸ்என்எல் பணியாளர்களின் வேலை நிறுத்தம் 2 வது நாளில் வாபஸ் பெறப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.
தங்களின் கோரிக்கைகளை கவனிப்பதாக தொலைத் தொடர்புத் துறைச் செயலர், பிஎஸ்என்எல் தலைவர் ஆகியோர் கூட்டு நடவடிக்கைக் குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உறுதியளித்ததையடுத்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதாக அக்குழுவின் மேற்கு வங்க அமைப்பாளர் அனிமேஷ் மித்ரா தெரிவித்தார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் வசூலிக்கப்பட்ட 3ஜி லைசென்ஸ் கட்டணம் ரூ18,500 கோடியை திருப்பி வழங்க வேண்டும்.
நிறுவன பங்குகளை விற்பனை செய்யக் கூடாது.
1 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியேற்றக் கூடாது.
பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு கூடுதல் கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும். கேபிள்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது.
-இவற்றை வலியுறுத்தியே இப்போராட்டம் நடைபெற்றது.
இரண்டாம் நாளிலேயே நாடு முழுவதும் தொலைத் தொடர்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. எனவே பேச்சுவார்த்தை நடத்தி ஸ்ட்ரைக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது அரசு.