வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: மீண்டும் பலத்த மழை பெய்யும்
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
தொடர்மழையால் இந்த 5 மாவட்டங்களிலும் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் வெள்ளம்:
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடியது.
தமிழகத்தில் இந்த மழை வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.
இந் நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும்.
இப்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடகிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்பட்டுள்ள 8வது காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.
கடந்த ஆண்டை விட 21 சதவீதம் அதிக மழை:
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டை விட 21 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. ஆனால் சென்னை நகரில் மட்டும் கடந்த ஆண்டை விட 28 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.
முதல்வர் கருணாநிதி ஆய்வு:
இந் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுடன் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், தங்குமிடம் ஆகியவற்றிற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யவும், நிவாரண உதவிகளை தாமதமில்லாமல் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.