நயினார் நாகேந்திரன் சொத்து குவிப்பு வழக்கில் 145 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
நெல்லை: முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து குவித்தது தொடர்பாக விஜிலென்ஸ் பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் நெல்லை நீதிமன்றத்தில் 145 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் நயினார் நாகேந்திரன். தற்போது அதிமுக ஜெ பேரவை மாநில செயலாளராக உள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக நயினார் நாகேந்திரன் சொத்து குவித்தாரா என விஜிலென்ஸ் போலீசார் கடந்த 2006ம் ஆண்டு விசாரணை நடத்தினர்.
2001ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி முதல் 2006ம் ஆண்டு மே மாதம் 13 ம் தேதி வரை வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 9 லட்சத்து 97 ஆயிரத்து 97 ரூபாய்க்கு தங்க நகைகள், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை நயினார் நாகேந்திரன் வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன், அவரது மனைவி சந்திரா, மைத்துனர்கள் வள்ளிக்கண்ணு, சுப்பிரமணியன், நடராஜன், நவராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை நெல்லை சிஜேஎம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விஜி்லென்ஸ் டிஎஸ்பி மனோகர குமார் 145 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார். அதில் 275 ஆவணங்கள், 168 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications