நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து சப் -கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
கோவில்பட்டி: நாலாட்டின்புத்தூர் நெடுஞ்சாலை பக்கம் பேருந்து நிறுத்தம் கட்ட அனுமதி கேட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பேருந்து நிறுத்தம் கட்ட வேண்டும் என்று கடந்த 8 மாதங்களுக்கு முன் ஊராட்சிமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அதற்கு உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதனை கண்டிக்கும் வகையிலும், ரயில்வே காலனிக்கு பேருந்து நிறுத்தம் கட்ட அனுமதி கோரியும் நாலாட்டின்புதூர் ஊராட்சிமன்ற தலைவர் சுப்பையா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில் ஆறுமுகம் இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.