பிப். 12-26-ல் ஜார்கண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல்வர் அறிவிப்பு
ஜம்ஷெத்பூர்: 34-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 12 முதல் 26-ம் தேதி வரை ஜார்கண்டில் நடக்கும் என்று அம்மாநில முதல்வர் அர்ஜுன் முன்டா நேற்று தெரிவித்தார்.
தேசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 7 தடவை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஜார்கண்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஜார்கண்ட் முதல்வர் அர்ஜுன் முன்டா கூறியதாவது,
நேற்று ராஞ்சியில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ராஞ்சியில் உள்ள விளையாட்டு காம்ப்ளக்ஸ்-க்கு என் முந்தைய ஆட்சிக் காலத்திலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு ஜார்கண்டில் நடைபெற வேண்டிய தேசிய விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது முடிவு செய்யப்பட்ட தேதிகளில் போட்டிகள் நிச்சயமாக நடக்கும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.
இப்போட்டிகளை சிறப்பான முறையில் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும்படி இது தொடர்பான அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.