'ஆந்திராவில் விழுந்த ஓட்டு சோனியாவுக்கோ ராகுலுக்கோ அல்ல!' - காங் எம்எல்ஏ
ஹைதராபாத்: ஆந்திர மாநில காங்கிரஸிலிருந்து ஒவொவரு நிர்வாகியாக விலக ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் ஜெகனின் ஆதரவாளர்களாக மாறி காங்கிரஸுக்கு எதிராக பேட்டியளித்து வருகின்றனர்.
ஆந்திராவின் சம்பலமருகு தொகுதி எம்எல்ஏ, ஆதிநாராயண ரெட்டி பகிரங்கமாக காங்கிரஸிலிருந்து வெளியேறி ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரித்துள்ளார். ஏற்கெனவே 12 எம்எல்ஏக்களை அணி சேர்த்துள்ள ஜெகனுடன் கை கோர்க்கும் 13வது எம் எல் ஏ இவர்.
இதுகுறித்து, ஆதி நாராயணா கூறுகையில், "கடந்த தேர்தலில் நான் ராஜசேகர ரெட்டியால்தான் வெற்றி பெற்றேன். எனக்காக அவரும், அவரது மகன் ஜெகன்மோகனும் தீவிர பிரசாரம் செய்தனர். அவர்களது பிரசாரத்தால்தான் நான் வெற்றி பெற்றேன். சோனியாகாந்தி, ராகுல்காந்திக்காக மக்கள் ஓட்டுப்போட வில்லை. அவர்களை மட்டும் முன் நிறுத்தியிருந்தால் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியிருக்கும்.
ஒருவேளை நான் காங்கிரசில் இருந்திருந்தாலும் ஜெகன்மோகனைத்தான் ஆதரித்திருப்பேன். இப்போது வெளிப்படையாகவே ஆதரிக்கிறேன். இந்த முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. அடுத்த தேர்தலில் ஜெகன் கட்சிதான் அமோக வெற்றி பெறும். அவருக்குதான் மக்கள் ஆதரவு உள்ளது...", என்றார்.