சென்னையில் ஜெகன்மோகன் ஆலோசனை!

ஆந்திர அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பதவி தனக்கு வரும் என்று எதிர்ப்பார்த்தார் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி. அவருக்கு கட்சி மட்டத்திலும் நல்ல செல்வாக்கு இருந்தது.
ஆனால் கட்சித் தலைவர் சோனியா காந்தியோ, ரோசய்யாவை முதல்வராக்கி ஜெகனை கண்டுகொள்ளாமல் விட, அவர் அப்போதிலிருந்தே தனிக் கட்சிக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார். ஒய் எஸ் ஆர் மறைவின் போது தற்கொலை செய்து கொண்ட தொண்டர்களைச் சந்தித்து ஆறுதல் கூற யாத்திரை தொடங்கினார். ஆனால் அதற்கும் காங்கிரஸ் மேலிடம் தடை போட, கட்சிக் கட்டுப்பாட்டை மீற ஆரம்பித்தார்.
சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் ஆகியோர் மீதான கடும் தாக்குதலையும் தனது டிவி மற்றும் பத்திரிகைகளில் தொடங்கிவிட்டார்.
கட்சி மேலிடம் அவரிடம் விளக்கம் கேட்க, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அவரது தாயார் விஜயலட்சுமி எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தனர்.
ஜெகன்மோகன் ரெட்டியை 12 எம்.எல்.ஏ.க்கள் ஆதரிக்கின்றனர். ஏராளமான காங்கிரஸ் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் ஜெகன்மோகன் பக்கம் தாவி விட்டனர்.
இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சென்னை அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டுகிகு வந்தார். அங்குதான் இப்போதும் தங்கி உள்ளார். அவரது வருகைக்கான காரணத்தை வெளியிட மறுத்து விட்டார்.
காங்கிரசில் இருந்து விலகிய பிறகு அவர் முதன் முறையாக 18-ந் தேதி யாத்திரை தொடங்குகிறார். கடப்பா மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த தொகுதிகளில் தனது தந்தையின் மரண செய்தி கேட்டு உயிரிழந்த 32 குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
மேலும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இருந்தபடி ஆலோசனை நடத்தி வருகிறார். அவரைச் சந்திக்க முக்கியத் தலைவர்கள் இன்று சென்னைக்கு வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications