குப்பன், சுப்பனுக்காக ஆரம்பித்த திமுக இன்று டாடா, பிர்லா, அம்பானி கட்சியாகி விட்டது-டி.கே.ரங்கராஜன்
திருநெல்வேலி: குப்பன், சுப்பனுக்காக பேரறிஞர் அண்ணா திமுகவை ஆரம்பித்தார். ஆனால் தற்போது அந்த கட்சி டாடா, பிர்லா, அம்பானி கட்சியாக மாறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இதுவரை நடந்திருக்கும் ஊழல்களில் 2ஜி தான் இமாலய ஊழல் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து திருநெல்வேலியில் டி.கே. ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாடாளுமன்றம் கடந்த 19 நாட்களாக முடங்கியுள்ளது. நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட வேண்டும் என்பதே எங்களது எண்ணம். வருடத்திற்கு குறைந்தது 100 நாட்கள் நடக்க வேண்டும் என்பது எங்களது செயல்திட்டத்தில் ஒன்றாகும்.
கடந்த 60 ஆண்டுகளில் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தான் இமாலய ஊழல். இதனால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு யாரையோ பாதுகாக்க மிகப் பெரிய ஊழலை மூடி மறைக்க பார்க்கிறது.
எனவே, நாடாளுன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கும் வரை எதிர்க்கட்சிகளின் போராட்டமும் தொடரும்.
தொலை தொடர்புத் துறை ஊழல் நிறைந்த துறையாக மாறிவி்ட்டது. குப்பன், சுப்பனுக்காக பேரறிஞர் அண்ணா திமுகவை ஆரம்பித்தார். ஆனால் தற்போது அது டாடா, பிர்லா, அம்பானி கட்சியாக மாறிவிட்டது.
தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத் துறைக்கு உட்பட்ட நிலங்களில் மோசடி நடந்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.