இலங்கை அமைச்சர் பெங்களூர் வருகை-கருப்புக் கொடி காட்டும் தமிழர் அமைப்பு
பெங்களூர்: இலங்கை சுகாதார அமைச்சர் தசநாயகா இன்று பெங்களூர் வருவதை எதிர்த்து கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என கர்நாடக தமிழர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது 21/2 லட்சம் அப்பாவி தமிழர்கள், ரஜபக்சே அரசால் கொல்லப்பட்டனர். பலர் இன்னும் முள் வேலியில் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சே கலந்து கொள்ள சென்றபோது, அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தியதால் திரும்பி சென்றார்.
தற்போது ராஜபக்சே அரசில் சுகாதார துறை அமைச்சராக இருக்கும் சலிண்டா தசநாயகா, பெங்களூர் அரண்மனை மைதானத்தில் இன்று நடைபெறும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைக்க உள்ளார். ஈவு இரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசின் அமைச்சரவையில் உள்ள தசநாயகா பெங்களூருக்கு வரக்கூடாது.
தசநாயகா பெங்களூர் அரண்மனை மைதானத்திற்கு மதியம் 3 மணிக்கு வர உள்ளார். அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் அகில கர்நாடக தமிழ் அமைப்பின் கூட்டமைப்பு சார்பில் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலை முன்பு காலை 11 மணிக்கு கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில், அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் பெங்களூரில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் இலங்கை மந்திரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் படி வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications