காதல் விவகாரம்... ப்ளஸ்டூ மாணவியைக் கடத்த முயன்ற நால்வர் கைது
சென்னை: சென்னையில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவியைக் கடத்த முயன்ற கும்பலை பொதுமக்களே பிடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்தப் பெண்ணின் தூரத்து உறவுக்கார இளைஞரின் காதல் மோகத்தால் நடந்த கடத்தல் முயற்சி இது என்பது தெரிய வந்தது.
மாணவியின் பெயர் நிலா என்கிற உதயநிலா. சென்னை அசோக்நகர் பகுதியில்உள்ள பள்ளியில் ப்ளஸ்டூ படித்துவருகிறார். இவர் தந்தை ஒரு இன்டீரியர் டிசைனர்.
இன்று மாலை இன்டிகா காரில் வந்த முரளி, ரகு,முருகன்,காளிமுத்து ஆகிய நால்வரும் பள்ளிக்குச் சென்று நிலாவை காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு பறந்துள்ளனர். நிலாவின் சத்தம் கேட்ட பொதுமக்கள், உடனடியாக காரை மடக்கினர். இளைஞர்கள் நால்வரையும் உதைத்து போலீஸ் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியே பரபரப்பானது.
விசாரணையில் முரளி என்ற இளைஞர் நிலாவின் தூரத்து உறவுக்காரர் என்பதும், இவர் நிலாவைக் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. நிலாவை தூக்கிப்போய் தாலி கட்டும் திட்டத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜாபர்கான்பேட்டை குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியன் விசாரித்து வருகிறார்.