கருணாநிதிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்: பச்சமுத்து பேச்சு
அரியலூர்: கருணாநிதி 87 வயதில் முதல்வராக உள்ளார். அடுத்த முறையும் தானே முதல்வராக வரவேண்டும் என நினைக்கிறார். கருணாநிதியின் உடல் நிலையை கருத்தில் கொண்டாவது அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சித் (ஐஜேகே) தலைவர் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
அரியலூர் அருகே இலுப்பையூரில் ஐ.ஜே.கே. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐ.ஜே.கே. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பாஸ்கர், குன்னம் ஜெயசீலன், லால்குடி டாக்டர் பார்கவன் பச்சைமுத்து ஆகியோரை கட்சித் தலைவர் பச்சமுத்து அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
உலகத்துக்கே ஜனநாயகம் கற்றுக் கொடுத்த நாடு இங்கிலாந்து. ஆனால், அங்கு பெயரளவில் கூட ராஜா, ராணி என்று யாரும் இருக்கக் கூடாது என்ற எண்ணம், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதற்காக, குடியாட்சியில் முடியாட்சி என்ற பெயரே இருக்கக் கூடாது எனக் கூறி அங்குள்ள ராணியின் கார் மீது முட்டையை வீசியுள்ளனர்.
இங்கு குறிப்பிட்ட ஒரு குடும்பம் மட்டுமே தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என நினைக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் 100 குடும்பங்கள் மட்டுமே தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றன. குடும்ப ஆட்சியை நீக்க வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து.
கருணாநிதி 87 வயதில் முதல்வராக உள்ளார். அடுத்த முறையும் தானே முதல்வராக வரவேண்டும் என நினைக்கிறார். கருணாநிதியின் உடல் நிலையை கருத்தில் கொண்டாவது அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
இந்த நாட்டில் மிகப்பெரிய சக்தி மக்களின் ஓட்டு சக்தி. அதை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.