கோவில்பட்டியில் ஆசிரியை மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி: கணவர் சதி என்று புகார்
கோவில்பட்டி: கோவில்பட்டி புறவழிச்சாலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி சரமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பொய்யாமொழி மகள் தேவிகா (27). இவர் ஆவனநத்தம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் நேற்று பள்ளிக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோவில்பட்டி பைபாஸ் சாலை சந்திப்பு அருகே வந்தபோது பின்னால் வந்த கார் திடீரென தேவிகா பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயம் அடைந்த தேவிகாவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவிகா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது,
ஆவனநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் சுப்புராஜ் என்பவருக்கும் எனக்கும் கடந்த 13-11-2006ல் திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம்.
விவாகரத்து கேட்டு இர தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நான் எனது பெற்றோருடன் கோவில்பட்டி சரமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறேன்.
வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது மொபட்டை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று கொலை வெறியோடு என்மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்து எனது கணவர் சுப்புராஜின் சதிச் செயல். எனவே அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.