யாருக்கும் சந்தேகம் வேண்டாம்; மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்-மு.க.ஸ்டாலின்
சென்னை: மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனாம்பேட்டையில் நடந்தது.
அதில் பேசிய ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமல்ல சொல்லாதவைகளையும் நிறைவேற்றியுள்ளோம்.
மற்ற கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பார்கள். அதன் பிறகு அவர்களை தேட வேண்டிய நிலைதான் வரும். ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி திமுகதான். அதனால் இந்த ஆட்சிக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தெம்பு திராணியோடு நாங்கள் மக்களை சந்திக்கிறோம். இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இருப்பதால் இன்முகத்துடன் வரவேற்கிறார்கள்.
கலைஞர் காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிந்து அமெரிக்க அதிபர் ஒபாமா இத்திட்டத்தை நிறைவேற்ற செயல்வடிவம் கொடுத்து வருகிறார்.
கிராமப் புறங்களில் உள்ள குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். கிராமப் பகுதிகளை தொடர்ந்து பேரூராட்சி, அதையடுத்து நகராட்சி, அதன்பின் மாநகராட்சி பகுதிகளில் கான் கிரீட் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்.
சில கட்சிகள் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவாக செயல்படுகிறார்கள். திமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் சிலர் அரசியல் நடத்த முடியாது என்று எண்ணி திமுகவை அழிக்க புறப்பட்டு இருக்கிறார்கள்.
திமுகவை அழித்த வரலாறு கிடையாது. அதை செய்ய நினைத்தவர்கள் எல்லாம் அனாதையாகி விட்டார்கள்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த நல்ல திட்டங்கள் எல்லாம் நின்று விடும். அதனால் தொடர்ந்து நீங்கள் திமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications