நில ஒதுக்கீடு புகார்: விளக்கம் கேட்டு எதியூரப்பாவுக்கு ஆளுநர் கடிதம்-மீண்டும் மோதல்

கர்நாடக முதல்வர் எதியூரப்பா பல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை குடும்பத்தோடு ஸ்வாஹா செய்துவிட்டார் என்று எதிர்கட்சிகள் புகார் தெரிவித்தன. இது குறித்து லோக் அயுக்தா விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து விசாரிக்க அரசு ஓய்வு பெற்ற நீதிபதி பத்மராஜ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு க்ரநாடக ஆளுநர் பரத்வாஜ் கடும் கண்டனம் தெரிவித்தார். நில ஒதுக்கீடு முறைகேடு குறித்து லோக் அயுக்தா தான் விசாரிக்க வேண்டும், மக்களை குழப்புவதற்காகத்தான் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால் தற்போது நில ஒதுக்கீடு புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு எதியூரப்பாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோரின் சுரங்கத் தொழில் குறி்த்தும் விவரம் கேட்டுள்ளார்.
கர்நாடகத்தில் மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ஆளுநர் எதியூரப்பாவின் ஊழல் புகார் குறித்து விளக்கம் கேட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதியூரப்பாவுக்கும், ஆளுநருக்கும் மீண்டும் மோதல் ஏற்படும் நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications