திருச்சி புனித ஜோசப் கல்லூரி ரெக்டார் சூசை மர்ம மரணம்-கொலையா?
திருச்சி: திருச்சியில் உள்ள பிரபலமான புனித ஜோசப் கல்லூரியின் ரெக்டார் சூசை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்தில்தான் இந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்த ராஜரத்தினம், கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கட்டாயக் கருத்தரிப்புக்கு உட்படுத்தியதாகவும் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.இந்த நிலையில் கல்லூரியின் ரெக்டார் மர்மமான முறையி்ல் மரணமடைந்திருப்பதால் திருச்சியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சூசையின் அறைக் கதவு வெள்ளிக்கிழமை முதலே மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து அறையின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்தபோது அவர் மூக்கு,வாயிலிருந்து ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும்.