ஸ்பெக்ட்ரம் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி ராஜாவுக்கு சிபிஐ சம்மன்

இதன் மூலம் ராஜாவையும் வழக்கில் ஒரு குற்றவாளியாக சிபிஐ சேர்க்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ படு நிதானமாக விசாரித்து வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. ராஜாவை இதுவரை ஏன் விசாரிக்கவே இல்லை என்றும் அது காட்டமாக கேட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் 2 முறை ராஜாவின் வீடுகள், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், அமைப்புகளில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 15ம் தேதியன்று நடந்த 2வது சோதனையின்போது தமிழகத்தில் 27 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது
இந்த நிலையில் தற்போது விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு கூறி ராஜாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோல நீரா ராடியாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராஜாவுக்கு சிபிசி 160வது பிரிவின் கீழ் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
160வது பிரிவின்படி, வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களையும் சம்பந்தப்பட்ட நபர் முழுமையாக தர வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் பைஜாலிடம் விசாரணை:
சம்மன் அனுப்பிய கையோடு இன்று டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து சிபிஐ அதிரடி விசாரணை நடத்தியது.
1966ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக வந்தவர் பைஜால். அவரிடம் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து மூன்று மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் வெளியில் வந்த பைஜால் கூறுகையில், சிபிஐயிடம் எனது விளக்கத்தை அளித்தேன் என்று கூறினார். என்ன விளக்கம் அளித்தீர்கள் என்று கேட்டபோது, உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா என்று கோபத்துடன் கேட்ட பைஜால், பின்னர் கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறியபடி போய் விட்டார்.
இதேபோல ராஜாவின் உதவியாளர்களான சந்தோலியா, ஸ்ரீவத்சவா, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோரும் கூட சிபிஐயால் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக ராஜாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications