ஊழல் செய்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்-ராகுல் காந்தி
டெல்லியில் நேற்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசுகையில், ஊழல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சொன்ன அனைத்துமே ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது.
ஊழல் செய்வோருக்கு எதிராக, ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்.
நாட்டில் ஊழல் தொடர்பான பல பிரச்சினைகள் இன்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சாமானிய மக்களின் வளர்ச்சியை அவை பறிப்பதாக உள்ளன.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த போதிய நேரத்தை செலவிட வேண்டும். நான் எந்த மாநிலத்திற்குப் போனாலும் அங்கு என்னிடம் நிறைய புகார்கள் மனுக்கள்தான் வருகின்றன. எனவே இவற்றை சரி செய்ய காங்கிரஸார் முழு வீச்சில் செயல்பட வேண்டும். ஒரு அமைச்சர் தனது நேரத்தை செலவிடுவதை விட கட்சியினர் அதிக நேரத்தை செலவிட முடியும்.
முதலில் நமது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கும், உயர் மட்டத் தலைவர்களுக்கும் இடையே நல்ல இணைப்பும், புரிதலும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நாம் சமூகத்தின் அடித்தட்டு மக்களை விரைவில் சென்றடைய முடியும். நமது கட்சி இன்னும் சமூ்கத்தின் அடித்தட்டு மக்களை நெருங்கவில்லை என்பதை உண்மை என்றார் ராகுல் காந்தி.
ஊழல் குறித்து பேசிய ராகுல் காந்தி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தோ, ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் குறித்தோ, காமன்வெல்த் ஊழல் குறித்தோ எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.