நெல்லையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க இடம் தேர்வு தீவிரம்: மதுரை ஐகோர்ட் நீதிபதி ஆய்வு
நெல்லை: அம்பாசமுத்திரம், தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதனை மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி இன்று ஆய்வு செய்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், தென்காசி தாலுகாவில் வாடகை கட்டிடங்களில் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்ட அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் அம்பை, தென்காசி நீதி்மன்றங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இவ்விரு இடங்களிலும் புதிய நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதி குடியிருப்பு கட்ட இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அம்பை மற்றும் தென்காசி நீதிமன்றங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன் இன்று ஆய்வு செய்கிறார். இதையடுத்து நெல்லை நீதிமன்றத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஆவண காப்பகத்தை அவர் திறந்து வைக்கிறார்.