நாகை-வேளாங்கண்ணி ரயில் சேவை: முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்
நாகப்பட்டினம்: நாகை-வேளாங்கண்ணி இடையே புதிய அகல ரயில் பாதை சேவையை இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கின்றார்.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை தமிழக முதல்வர் கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்ஃபரஸிங் மூலம் திறந்து வைக்கிறார். மேலும், ரயில் போக்குவரத்தையும் அவரே கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
வேளாங்கண்ணியில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் ஈ. அஹமது தலைமை வகிக்கிறார்.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாநில அமைச்சர் உ. மதிவாணன், ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி. ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கினறனர்.
இந்த ரயில் சேவை இன்று முதல் செயல்படும். அதன்படி சிறப்பு ரயில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினத்தைச் சென்றடையும். வழக்கமான ரயில் சேவை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.