ஸ்பெக்ட்ரம்: டெல்லி வைத்து ராசாவிடம் 24ம் தேதி சிபிஐ விசாரணை!
இந்த விவகாரம் தொடர்பாக ராசா மற்றும் நிரா ராடியாவின் வீடுகள், அலுவலகங்களிலும், ராசாவின் உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் வீடுகளிலும், பல அதிகாரிகளின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியது.
இதைத் தொடர்ந்து பலரிடமும் நேரிலும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தொலைத் தொடர்ப்பு ஒழுங்கு முறை ஆணைய முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலிடம் விசாரணை நடத்திய சிபிஐ நேற்று நிரா ராடியாவின் வீட்டுக்கே சென்று அவரிடம் விசாரணை நடத்தியது.
அதே போல முன்னாள் அமைச்சர் ராசாவிடமும் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று இந்த சம்மனை கொடுத்தனர்.
அப்போது ராசா சென்னையில் இருந்தார். எனவே விசாரணைக்கு வருமாறும், அதற்கான நேரத்தை கூறுமாறும் சிபிஐ கோரியது. இதையடுத்து 24ம் தேதி சிபிஐ முன் ஆஜராவதாக ராசா தரப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதை ஏற்ற சிபிஐ 24ம் தேதி விசாரணைக்கு நேரம் ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. அன்று டெல்லியில் வைத்து ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.
இதற்காக நாளை ராசா டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
இதற்கிடையே நிரா ராடியாவிடமும் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. ராசாவை விசாரித்துவிட்டு ராடியாவை சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரிப்பர் என்று தெரிகிறது.
திமுக நிலை என்ன?-தெளிவாக்க சிபிஎம் கோரிக்கை:
இதற்கிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக தலைமை தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பிருந்தா காரத் கோரியுள்ளார்.
தமிழக பழங்குடியின மக்கள் சார்பில், சென்னை மெமோரியல் ஹால் முன் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற பொது கணக்கு குழு முன் ஆஜராகி விளக்கமளிக்க தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியாகும்.
இந்த முறைகேடு விவகாரத்தில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை திமுக, தலைமை தெளிவுபடுத்த வேண்டும். இதி்ல் ராசாவுக்கு மட்டும் தொடர்பில்லை என்பதால், இந்த விவகாரம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் திமுக பதில் சொல்ல வேண்டும் என்றார்.