கட்சியைக் கலைக்கவும் தயார்: ராமதாஸ் சொல்கிறார்
சேலம்: பாமகவை விட நல்ல கொள்கைகள் கொண்ட வேறு கட்சி இருந்தால், நான் பாமகவை கலைத்து விட்டு, அந்தக் கட்சியில் சேரத் தயார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதி பாமக இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாம் கூட்டம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,
தமிழகத்தில் கொள்கை பிடிப்புள்ள ஒரே கட்சி பாமக தான். இந்தக் கட்சியில் தான் யாரும் மது குடிக்கக் கூடாது, அனைவருக்கும் இலவச கல்வி, அனைவருக்கும் கட்டாயக் கல்வி உள்ளிட்ட கொள்கைகள் முன்னிறுத்தப்பட்டுள்ளன. பாமக அளவுக்கு கொள்கை பிடிப்புள்ள கட்சி தமிழகத்தில் வேறு எதுவும் இல்லை.
அவ்வாறு, பாமகவை விட நல்ல கொள்கை உள்ள கட்சி வேறு உள்ளது என்று யாராவது கூறினால், பாமகவைக் கலைத்து விட்டு, அந்த கட்சியில் சேர நான் தயார் என்றார்.
முன்னதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசுகையி்ல்,
இது மற்ற கட்சிகள் நடத்துவது போல் மாநாடோ, கூட்டமோ அல்ல. இளைஞர்களுக்கான பயிற்சி முகாம். நீங்கள் வீட்டுக்கு சென்று அருகில் உள்ள வீட்டிலும், சொந்தக்காரர்களிடமும் பேசி, அவர்களை பாமகவுக்கு கூட்டி வரவேண்டும். அவ்வாறு செய்தால், நாம் யார் தயவும் இல்லாமல் வெற்றி பெறமுடியும்.
இது அனைத்து சாதி மக்களுக்காகவும் பாடுபடும் கட்சி.நான் மத்திய அமைச்சராக இருந்த போதுதான் 108 ஆம்புலன்ஸ் திட்டம், கிராமப்புற சுகாதார திட்டம், சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தேன் என்றார்.