நவீன் பட்நாயக் கட்சிக் கூட்டத்தில் தேசியக் கொடிக்கு அவமரியாதை-போலீஸில் புகார்

இதுகுறித்து சேவ் ஒரிசா அமைப்பின் தலைவர் பபானி பரிஜா, ஒரிசா லோக்தள தலைவர் தீப்தி மொஹந்தி ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதில், பிஜூ ஜனதாதள நிறுவன விழாவில் தேசியக் கொடியை அவமரியாதைக்குரிய வகையில் காட்டினர் அக்கட்சியினர். இதைத் தடுக்கத் தவறி விட்டார் நவீன் பட்நாயக். எனவே நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபி சத்பதி கூறுகையில், எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன. இருப்பினும் இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. விசாரித்து வருகிறோம் என்றார்.
சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில், கதகானா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கட்சித் தொண்டர், தேசியக் கொடியில் பிஜூ ஜனதாதள பெயரை எழுதி அதை நவீன் பட்நாயக்கிடம் கொடுத்தார். மேலும், தேசியக் கொடியில் அசோக சக்கரத்திற்குப் பதில், பிஜூ ஜனதாதளத்தின் தேர்தல் சின்னத்தைப் பொறித்திருந்தனர்.
இந்த செயலுக்கு நவீன் பட்நாயக் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸும் கோரியுள்ளது. மேலும் அவர் மீது 1950ம் ஆண்டு தேசியக் கொடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications