ஜன. 9ல் கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு எதிராக பாஜக போராட்டம்
நாகர்கோவில்: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக பாஜக வரும் ஜனவரி 9-ம் தேதி கண்டனப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சமீபத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.
அப்போது அவர் குமரி மாவட்டத்தில் பட்டா நிலத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டுவதற்கு உள்ள தடை, அ.தி.மு.க. ஆட்சி வந்தால் அகற்றப்படும் என்று கூறினார். இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த 1982-ம் ஆண்டு அம்மாவட்டத்தில் மதக்கலவரம் ஏற்பட்டபோது அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன், புதிதாக வழிபாட்டு தலங்கள் அமைப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கமிஷனின் பரிந்துரை அமலில் உள்ள நிலையில் ஜெயலலிதா இது போன்று வாக்குறுதியளித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என பாஜக தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரி 9-ம் தேதி சாமித்தோப்புக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகிறார். அப்போது பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாமித்தோப்பு தலைமைபதி நிர்வாகி பாலபிரஜாதிபதி அடிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
வைகுண்டர் அவதார தினத்துக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் விடுமுறை அளித்தார்.
அதற்க்காக பாராட்டு தெரிவிக்க கடந்த ஐந்து ஆண்டுகளாக அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. தற்போது தான் அவர் வருகை தருகிறார்.
எனவே, போராட்டம் நடத்துவது பா.ஜ.க- வின் உரிமை என்றாலும் இதை வேறு தேதிக்கு மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications