ஸ்பெக்டரம் ஊழல் இல்லை, வெறும் வதந்தி-காதர் முகைதீன் கருத்து
நெல்லை: ஸ்பெக்டரம் ஊழல் இல்லை. அது யூகத்தின் அடிப்படையில் பரப்பபடும் வதந்தியாகும். இதனால் வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கு எந்த பாதிப்பும் வராது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தமிழகம் முழுவதும் 10 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க முடிவு செய்யதுள்ளோம்.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் இது வரை 85 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களைச் சேர்த்த நெல்லை மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சியின் நிறுவன நாளான மார்ச் 10-ம் தேதி பரிசு வழங்கப்படும்.
தி.மு.க.வும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கொள்கை ரீதியாக ஒற்றுமை உள்ள கட்சிகள் என்பதால் இரு கட்சிகளின் உறவும் நிலையாக உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை ஒரே நாளில் நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வோம். தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளா ஜெயலலிதா சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக இருந்தேன் என்று கூறுவது முரண்பாடான கருத்தாகும். அவர் சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், அவர்களுடைய மனது புண்படும்படியும் நடந்து கொண்டார். அதை விட தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தவரே ஜெயலலிதா தான். இந்த சட்டத்திற்கு சிறுபான்மை மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்த பிறகே அவசர சட்டத்தில் அதை ரத்து செய்தார்.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதி தான், மதமாற்ற தடை சட்டத்தை சட்டமன்றத்தை கூட்டி தீர்மானமாகக் கொண்டு வந்து முறையாக ரத்து செய்தவர். மேலும், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவரும் கருணாநிதி தான்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் அறிக்கையின்படி 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இதற்கு ஜெயலலிதா குரல் கொடுக்கவில்லை. பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறியவர் அவர்.
ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் பொதுகணக்கு குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறி உள்ளதால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை.
ஸ்பெக்டரம் ஊழல் இல்லை. அது யூகத்தின் அடிப்படையில் பேசப்படும் வதந்தியாகும். இதனால் வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கு எந்த பாதிப்பும் வராது என்றார்.