நான், தங்கபாலு உள்ளிட்ட 7 காங். தலைவர்கள் லோக்சபா தேர்தலில் தோற்க திமுகதான் காரணம்-இளங்கோவன்

சென்னை பெரம்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் 126வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
கொஞ்ச காலமாக காங்கிரஸ் தொண்டர்கள் விரக்தியுடன் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நமக்கு இங்கே அங்கீகாரம், மரியாதை வேண்டும்; மற்றவர்களை போல் தங்கள் பைகளை நிரப்ப நாம் விரும்பவில்லை. தமிழக மக்களை நல்ல நிலைக்கு கொண்டு வர நினைக்கிறோம்.
காங்கிரசுக்கு ஸ்பெக்ட்ரம் தலைவலி யாரால் வந்தது; நம் மீது குற்றசாட்டு வந்தால் உடனே சற்று ஒதுங்கி நில் என, மேலிடம் கட்டளையிடும். எங்களோடு இருந்தால் திருந்துவீர்கள் என, நினைத்து சேர்ந்தோம்; ஆனால் திருத்தவே முடியாது, என்ற நிலையில் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் வேண்டும், மரியாதை வேண்டும், அங்கீகாரம் வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள எல்லா காங்கிரஸாரும் கருதுகின்றனர். தி.மு.க. செய்யும் தவறுகளுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பலிகடா ஆக வேண்டியுள்ளது.
எனவே, தி.மு.க. அணியில் காங்கிரஸ் கட்சி இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான காங்கிரஸ்காரர்களின் விருப்பமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களின் இந்த உணர்வுகளை எல்லாம் நாங்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் சொல்லியிருக்கிறோம்.
ஆகவே, காங்கிரஸ் கட்சி விரைவில் நல்ல முடிவை எடுக்கும். அதன் பிறகு தமிழகத்தில் எங்களது பிரசாரமே வேறு விதமாக இருக்கும்.
நான் காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் உண்மையை பேசுகிறேன். என்னை எவரும் தடுக்க முடியாது. சிலர் சூழ்நிலை, பதவி காரணமாக பேச முடியாமல் இருக்கின்றனர். ஆனால், தொண்டர்கள் எண்ணம் மேலிடத்திற்கும் தெரியும். ராகுல் சென்னை வந்த போது, மூத்த அரசியல்வாதியை பார்க்கவில்லை என்ற கோபத்தில், தி.மு.க., பொதுக்கூட்டங்களில் ராகுலையும், சோனியாவையும் திட்டுகின்றனர்.
என்னை வெற்றி பெற வைத்து மத்திய அமைச்சராக்கியது தி.மு.க., என்கின்றனர். நான் ஒப்புக் கொள்கிறேன். தற்போது தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி முதல் அமைச்சர்கள் வரை, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் வரை அனைவரையும் வெற்றி பெற வைத்தது காங்கிரஸ் தான் என்பதை நீங்கள் ஒப்புகொள்வீர்களா?
ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னையும், பிரபு, கார்வேந்தன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு உட்பட ஏழு பேரை தோற்க வைத்தது தி.மு.க., தான். அந்த தேர்தலில் தி.மு.க., வுடன் கூட்டணி வைக்காவிட்டால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.
தமிழகத்தில் வேளாண்மை துறையில் ஊழல் நடந்துள்ளது. என்னைச் சீண்டினால் அவற்றை வெளியிடுவேன். எனவே, எங்கள் உணர்வுகளை மேலிடத்தில் சொல்லி விட்டோம். இன்னும் 15 நாட்களில் காங்கிரஸ் விழித்துக் கொள்ளும். மேலிட நடவடிக்கை தெரியும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications