சிட்டி வங்கி ஊழியரின் ரூ. 400 கோடி மோசடி-ஹீரோ நிறுவன தலைமை நிதி அதிகாரி கைது
டெல்லி: சிட்டி வங்கி ஊழியர் சிவராஜ் பூரி வாடிக்கையாளர்களை மோசடியாக ஏமாற்றி ரூ. 400 கோடி அளவுக்கு சுருட்டிய மிகப் பெரிய ஊழல் வழக்கில் ஹீரோ குழும தலைமை நிதி அதிகாரி சஞ்சய் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் கர்கானில் உள்ள சிட்டி வங்கிக் கிளையில் மேலாளராகப் பணியாற்றி வந்தவர் பூரி. இவர் பெரும் பணக்கார வாடிக்கையாளர்களை அணுகி போலியான திட்டங்களைக் கூறி அவர்களிடமிருந்து பெருமளவிலான பணத்தைப் பெற்று அவற்றை தனது கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.
கிட்டத்தட்ட ரூ.400 கோடி அளவுக்கு அவர் மோசடியாக பணத்தைச் சுருட்டியதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை சமீபத்தில் ஹரியானா போலீஸார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் சிலருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த மோசடியில் தொடர்புடையதாக ஹீரோ குழும தலைமை நிதி அதிகாரி சஞ்சய் குப்தா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பூரி தெரிவித்த போலியான திட்டத்தில் ஹீரோ குழுமமும் ரூ. 50 கோடி அளவுக்கு பணத்தை முதலீடு செய்துள்ளது. இதில் பூரிக்கு உதவியாக குப்தாவும் இருந்தது விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து தற்போது குப்தாவும் பிடிபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications