குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகள் என்ன?
சென்னை: விஜய் ஆட்சியை கவிழ்க்க தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீனை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதன்படி இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை மாலை என இருவேளை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்கு தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார், சென்னையை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் தியாகராஜன், நரேஷ், கரூரை சேர்ந்த திமுக பிரமுகர்களான ரமேஷ், கார்த்திக் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
இவர்களை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் ரூ.35 கோடி பேர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை காவலில் எடுப்பதற்கான காரணத்தை விளக்கி கூறினார்கள். இதற்கிடையே, கைதானவர்கள், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் கூறிய அறிவுரையின்பேரில்தான் தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்ததாக கூறப்படுகிறது.
நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் மீது போலீசார் சம்மன் அனுப்பினர். இருவரும் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தலைமறைவாகினர். இதற்கு மத்தியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான இன்று நடைபெற்றது.
காரசார வாதங்கள் போலீஸ் மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வைக்கப்பட்டது. விசாரணை முடிவில் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகளுடன் நீதிபதி இளந்திரையன் முன் ஜாமீன் வழங்கியுள்ளார். செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமாரும் தினமும் காலை மற்றும் மாலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட காரசார வாதங்கள்
போலீஸ் தரப்பு:
செந்தில் பாலாஜி சதி செய்தார் என்பதற்கு உரிய ஆதாரம் உள்ளது. தமிழ்நாடு அரசை கவிழ்க்கும் முயற்சிதான் இந்த வழக்கு. சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் செய்து ஆலோசனை நடத்தியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலும் சில எம்.எல்.ஏக்களை அணுகியதற்கு ஆதாரம் உள்ளது. சதி செய்தவர்கள் ஒன்று கூடியது செல்போன் எண் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தவெக எம்.எல்.ஏக்கள் 10 பேரிடம் பேசியிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி சதி செய்ததற்கும் ஆதாரம் உள்ளது. எம்.எல்.ஏவுக்கு 35 கோடியும் இடைத்தரகருக்கு 5 கோடியும் பேசப்பட்டுள்ளது. ஹவாலா பணப்ரிமாற்றமும் நடைபெற்றுள்ளதற்கான ஆதாரமும் உள்ளது - என்று காவல்துறை தரப்பில் ஆஜரான ஜான் சத்யன் வாதாடினர்.
செந்தில் பாலாஜி தரப்பு வாதம்
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோர் வாதாடினர். அவர்கள் முன்வைத்த வாதத்தில், "தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி என்பது எம்.எல்.ஏ இளையராஜாவின் கற்பனை. சபாநாயகர் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டவர். சபாநாயகருக்கு எதிராக செந்தில் பாலாஜி ஏன் செயல்பட வேண்டும். கரூர் இடைத்தேர்தல் சமயத்தில் அவரை தேடுகிறது போலீஸ். அரசியல் நோக்கத்திற்காக செந்தில் பாலாஜியை தேடுகிறார்கள். விசாரணைக்கு ஒத்துழைக்க செந்தில் பாலாஜி தயாராக உள்ளார்" என்று வாதிடப்பட்டது.














Click it and Unblock the Notifications