ஆட்டத்தை ஆரம்பிக்கும் அமித்ஷா! டெல்லியில் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு? மாறப்போகும் கணக்கு என்ன?
சென்னை: தவெகவின் உட்கட்சிப் போட்டியும், விஜயபாஸ்கர் வருகையால் ஏற்பட்டுள்ள சலசலப்புகளும் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகின்றன. அதேவேளையில், அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் டெல்லி சந்திப்பு தமிழகக் கூட்டணி அரசியலில் மிகப்பெரிய வியூக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவைகளை பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது கருத்தை கூறியிருக்கிறார்.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள தராசு ஷ்யாம், "கடந்த பொதுத்தேர்தலில் கரூரில் தவெகவின் தேர்தல் செயல்பாடு மிக நன்றாக இருந்தது. கரூரில் ஆளுங்கட்சியான திமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமளவில் பணம் செலவு செய்து அங்கு வெற்றியைப் பதிவு செய்தார்.

விஜயபாஸ்கர் தந்த அப்செட்
2வதாக வந்த உள்ளூர் நிர்வாகி மதியழகனும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றார். தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், தவெகவிற்கு இடைத்தேர்தலில் சில சாதகமான அம்சங்கள் இருக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது.
ஆனால், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த விராலிமலை விஜயபாஸ்கரின் தற்போதைய சேர்க்கை, கட்சிக்கு எதிர்பார்த்த அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூற வேண்டும். அவர் புதியதாகப் பெரிய அளவில் அதாவது 25000 பேர் கூட்டத்தைக் கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்வில் வெறும் 2,000 முதல் 3,000 பேர் மட்டுமே வந்திருந்தனர், அவர்களிலும் பாதிப் பேர் வந்த உடனே அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
அமைச்சர் நிர்மல் குமார்
ஏற்கனவே தவெகவில் சேர்ந்தவர்களைத்தான் அவர் மீண்டும் மேடைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டு, மேடையில் அவர்கள் பெயரை வாசிக்கிறார். விஜயபாஸ்கரை மிகப்பெரிய பலம் என்று நினைத்த தவெகவினருக்கு இந்த விபரம் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
இதனால் தவெக தரப்பினர் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏமாற்றம் ஆதவ் அர்ஜுனுக்கும் ஏற்பட்டுள்ளது. தவெக கட்சிக்குள்ளேயே ஆதவ் அர்ஜுன், புஸ்ஸி ஆனந்த், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இடையே ஒரு வகையான உட்கட்சிப் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக ஆதவ் அர்ஜுன் பொதுவெளியில் பேசாமல் ஒதுங்கியிருக்கிறார். தற்போது அதிகாரப்பூர்வமாகப் பேசுவது அமைச்சர் நிர்மல் குமார் மட்டும்தான்.
அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி
நாம் தமிழக நிலவரத்தை மட்டும் உற்று நோக்கிக் கொண்டிருக்கக் கூடாது, அதற்குப் பின்னால் இருக்கும் டெல்லியின் அரசியல் வியூகங்களையும் கவனிக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் அடுத்த 10 நாட்களுக்குள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க இருக்கிறார்கள். இந்த சந்திப்பிற்குப் பின்னணியில் பாஜகவின் ஒரு நீண்ட கால அரசியல் திட்டம் உள்ளது.
அதிமுக - பாஜக
அதிமுகவிற்குள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற குரல்கள் திடீரென எழுகின்றன. இது முழுக்க முழுக்க டெல்லியின் குரல்தான். கடந்த 2017ம் ஆண்டும் இதேபோல பொறுப்பு ஆளுநரை வைத்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய 2 பேரையும் கவர்னர் மாளிகையில் கையை உயர்த்திப் பிடிக்க வைத்ததே டெல்லிதான்.
ஒன்றுபட்ட அண்ணா திமுக என்ற கோட்பாடுதான் எப்போதுமே பாஜகவின் அரசியல் திட்டமாக இருந்து வருகிறது. இப்போதும் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாகப் பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அமித்ஷாவுடனான இந்த அடுத்தகட்டச் சந்திப்பு தமிழக அரசியல் கூட்டணியிலும், அதிமுகவின் எதிர்காலத்திலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications