தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து விலக அழகிரி முடிவு?

தமிழக முதல்வர் கருணாநிதியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சந்தித்து, தனது தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறி ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டதாகவும் செய்தி பரவியுள்ளது.
முதல்வரை அழகிரி சந்தித்தபோது, அடுத்த வாரம் நடக்க உள்ள கனிமொழி ஏற்பாடு செய்துவரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை தற்காலிகமாக தி.மு.க -விலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
இந்த கோரிக்கையை ஏற்காதபட்சத்தில் அவர் தனது ராஜினாமாவை ஏற்று கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தியால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
கருணாநிதி தலைமையில் அவசர ஆலோசனை
இந்தநிலையில், முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் இன்று திடீரென அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் திமுக உயர் மட்டத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இக்கூட்டத்தில், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அழகிரி குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. அதேசமயம், சட்டசபைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல் பணிகள், தேர்தலுக்கான நிதி திரட்டுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 3ம் தேதி கட்சி பொதுக் குழுவைக் கூட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications