ஜெ. ஓய்வெடுக்கும் கோடநாடு எஸ்டேட் பாதையை மக்கள் பயன்படுத்தலாம்-சுப்ரீம் கோர்ட்

கோடநாடு எஸ்டேட்டின் உள்பகுதியில், 2 கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள், கோத்தகிரிக்கு வரவேண்டுமானால், எஸ்டேட் பாதையைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எஸ்டேட் நிர்வாகத்திடம் அனுமதி வாங்கினால்தான் அந்தப் பாதையைப் பயன்படுத்த எஸ்டேட் நிர்வாகம் அனுமதித்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். போராட்டங்களும் நடத்தினர்.
கோடநாடு எஸ்டேட் பாதையை பயன்படுத்த எஸ்டேட் நிர்வாகம் விதித்திருந்த தடையை எதிர்த்து, அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் கருணை அடிப்படையில் பொதுமக்கள் பயன்படுத்த சாலையை அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்டது.
ஆனால் இதை ஏற்காத கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் முகுந்தகம் சர்மா, அனில் தவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,
கடந்த விசாரணையின்போது, கோடநாடு எஸ்டேட் பொது வழிப்பாதையை அரசு கையகப்படுத்த இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அந்தப் பாதை கையகப்படுத்தப்பட்டதா? அல்லது அரசின் நிலை என்ன? என்று தமிழக அரசு வக்கீல்களிடம் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த வக்கீல்கள் அந்தி அர்ஜூனா மற்றும் வில்சன் ஆகியோர், பொது வழிப்பாதையை கையகப்படுத்த அரசு அனுமதி அளித்துவிட்டது. அதற்காக, நில ஆர்ஜிதம் செய்வதற்கான நோட்டீஸ் விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து எஸ்டேட்டில் உள்ள இரண்டரை கிலோமீட்டர் பொதுப் பாதையை பொதுமக்கள் சுதந்திரமாக பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையையும் ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்பை கிராம மக்கள் வரவேற்றுள்ளனர். நேற்று பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து கோடநாடு எஸ்டேட் ஊராட்சித் தலைவரும், திமுகவைச் சேர்ந்தவருமான பொன்தோஸ் கூறுகையில்,
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக கோடநாடு எஸ்டேட் பொது வழிப்பாதையை கையகப்படுத்தி, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். சாலையை கையகப்படுத்தினால் மட்டுமே பொது வழிப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications