ஜெயந்தி நடராஜனுக்கு காமராஜர் விருது-எம்.எல்.ஏ. ரவிக்குமாருக்கு அண்ணா விருது
சென்னை: காங்கிரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜனுக்கு காமராஜர் விருதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமாருக்கு அண்ணா விருதும், திருவள்ளுவர் விருது வளன் அரசுக்கும் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப்பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோரில் சிறந்தோரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் அரசு விருதுகள் வழங்கி போற்றிடும் சீரிய திட்டம் முதல்-அமைச்சர் கருணாநிதியால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்படி, 2011-ம் ஆண்டிற்கான "அய்யன் திருவள்ளுவர் விருது'' பா.வளன் அரசுக்கு வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
2010-ம் ஆண்டிற்கு, சமூக நீதிக்கான "தந்தை பெரியார் விருது'' கோ.சாமிதுரைக்கும், அறிஞர் அண்ணா விருது'' து.ரவிக்குமார், எம்.எல்.ஏ.வுக்கும், "அம்பேத்கர் விருது''டி.யசோதா, எம்.எல்.ஏ.வுக்கும்,
"பெருந்தலைவர் காமராசர் விருது'' ஜெயந்தி நடராஜன், எம்.பி.க்கும், பாரதியார் விருது''நா.மம்மதுவுக்கும், "தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது'' பேராசிரியர் அ.அய்யாசாமிக்கும், "பாவேந்தர் பாரதிதாசன் விருது'' ரா.இளவரசுக்கும், "முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது'' ரா.மதிவாணனுக்கும் வழங்கிட தமிழக அரசு நேற்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன், தங்கப்பதக்கமும், தமிழக அரசின் சார்பில் அணிவிக்கப்படும். வரும் 16-ந் தேதி திருவள்ளுவர் தினத்தன்று நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ள விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி விருதுகளை வழங்கி சிறப்பிப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications