காமன்வெல்த் போட்டி ஊழல்-கல்மாடியிடம் சிபிஐ கிடுக்கிப் பிடி விசாரணை

கடந்த டிசம்பர் 24ம் தேதி கல்மாடியின் வீடுகளில் நடத்திய சோதனையின்போது பல முக்கிய ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது. அவற்றை வைத்துக் கொண்டு இன்று கல்மாடியிடம் விசாரணை நடைபெற்றது.
முக்கியமாக க்வீன்ஸ் பேட்டன் ராலியில் நடந்த முறைகேடுகள் குறித்து கல்மாடி விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது.
திங்கள்கிழமையன்று காமன்வெல்த் போட்டி அலுவலகத்திற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் க்வீன்ஸ் பேட்டன் ராலி தொடர்பான சில ஆவணங்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களையும் பெற்றுள்ளனர்.
இன்றைய விசாரணையின்போது சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த உரிமை குறித்தும் கல்மாடியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
ஏற்கனவே கல்மாடியின் முக்கிய உதவியாளர்களான மனோஜ் போர்டே, பி.கே.ஸ்ரீவத்சவா, ஏ.கே.சின்ஹா ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. காமன்வெல்த் போட்டி நிதி முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 3 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு சிபிஐ தலைமையகத்திற்கு வந்தார் கல்மாடி. அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து விசாரணையைத் தொடங்கினர் அதிகாரிகள்.
இன்றைய விசாரணைக்கு மனோஜ் போர்டே, ஸ்ரீவத்சவா, சின்ஹா ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications