போலீஸ் கெடுபிடியால் தவிக்கும் சங்கரன்கோவில் நகை தொழிலாளர்கள்
சங்கரன்கோவில்: போலீசாரின் கெடுபிடியால் சங்கரன்கோவில் நகைத் தொழிலாளர்கள் தொழில் நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் தவிக்கின்றன.
சங்கரன்கோவில் மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்த பழனி என்பவரை ராஜபாளையம் போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் சங்கரன்கோவில் நேரு தெருவைச் சேர்ந்த செல்வராஜ், பாலமுருகன், மாரியப்பன், மாடசாமி ஆகிய 4 பேரை கடந்த 24-ம் தேதி அதிகாலை ராஜபாளையம் டிஎஸ்பி ராஜகோபால் தலைமையிலான போலீசார் பிடித்து சென்றனர்.
இவர்களை விடுவிக்க வலியுறுத்தி அன்று இரவு சங்கரன்கோவி்ல் மெயி்ன் ரோட்டில் நகை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 25-ம் தேதி நகர காவல் நிலைய போலீசார் 25 பெண்கள் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதி்ல் 30க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றனர்.
ராஜபாளையம் போலீசார் பிடித்து சென்ற 4 பேரையும் குறிப்பிட்ட நகையை பறிமுதல் செய்த பின்னர் எவ்வித வழக்கும் இன்றி விடுவித்தனர். இதனால் இப்பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் என வியாபாரிகளும், தொழிலாளர்களும் கருதிய நிலையில் போலீசார் திடீரென்று சாலை மறியல் செய்த வழக்கில் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட நகை தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் தலைமறைவு வாழ்க்கை நடத்துவதால் 12 நாட்களுக்கு மேலாக அவர்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சிரமத்தில் உள்ளன. ஏற்கனவே தங்கத்தின் விலையேற்றத்தால் தொழில் வாய்ப்பு குறைந்து சிரமப்பட்டு வரும் நிலையில் தற்போது போலீசாரின் கெடுபிடியால் நகை தொழிலாளர்கள் வாழ்வு கேள்விக்குறியாக உள்ளது.












Click it and Unblock the Notifications