2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை முழுவதுமாக ரத்து செய்ய கோரி சுவாமி புது வழக்கு!
டெல்லி: ஆசியாவின் மிகப் பெரிய முறைகேடு என்ற பெருமைக் காரணமான 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சுவாமி தாக்கல் செய்த மனுவில், அக்டோபர் 1, 2007-க்கு முன் 2 ஜி உரிமம் வேண்டி வந்த விண்ணப்பங்களில் தகுதியுடைய நிறுவனங்கள் அனைத்தையும் மீண்டும் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது மனுவி்ல் மேலும் அவர் கூறியிருப்பதாவது:
"தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் கூறியுள்ளபடி, இந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்த சட்ட நடைமுறையும் முறையாகப் பின்பற்றப்படவில்லை. தொலைத் தொடர்பு உயர்மட்டக் கமிட்டியிடமும் இதுகுறித்து ஆலோசிக்கப்படவில்லை. நிதியமைச்சகத்தின் வழிகாட்டல்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அறிவுரையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் யோசனையையும் பின்பற்றவில்லை. இதன் விளைவு அளவிடமுடியாத இழப்பை தேசம் சந்தித்துள்ளது.
ஒதுக்கப்பட்ட 85 உரிமங்களில் 6 புதிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் உரிமம் பெற்று 12 மாதங்களில் சேவையைத் துவங்க வேண்டிய அவை கடந்த டிசம்பர் 31, 2009 வரை சேவையை ஆரம்பிக்கவே இல்லை.
அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா, தனக்கு வேண்டப்பட்ட ஸ்வான், லூப், யுனிடெக் மற்றும் டேடாகாம் போன்றவற்றுக்கு உரிமம் ஒதுக்கியுள்ளார். இவை அடிப்படை நிபந்தனைகளைக் கூட பூர்த்தி செய்யாத நிறுவனங்களாகும்.
எனவே 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டையே முற்றாக ரத்து செய்துவிட்டு, புதிதாக ஏலம் விட உத்தரவேண்டும்", என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications