2011-2012ம் ஆண்டுக்கான தமிழக இடைக்கால பட்ஜெட்: பிப்ரவரி 4ம் தேதி தாக்கல்
சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 4ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் தேர்தல் கால அறிவிப்புகள் ஏராளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை மறுதினம் கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்கும். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகமும் பேரவை வளாகமும் அமைந்த பிறகு முதல்முறையாக கவர்னர் புதிய சட்டசபையில் உரைநிகழ்த்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறஉள்ள நிலையில் கவர்னரது உரையில் பல முக்கிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அடுத்த நாள் முதல் விவாதம் நடைபெறும்.
ஒருவார காலம் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் பிப்ரவரி 4ம் தேதி இந்த 13வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் தொடங்கும்.
சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், 2011- 2012ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 4ம் தேதி தாக்கல் செய்யப்படும்.
நிதியமைச்சர் அன்பழகன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். வழக்கமாக ஆண்டுதோறும் நிதிநிலை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் மே மாதம் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பிப்ரவரி 11ம் தேதி 2011-2012ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2010-11ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட் அறிக்கையும் தாக்கல் செய்யப்படும்.
அத்துடன் பட்ஜெட் கூட்டத் தொடர்மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.
சட்டசபை தேர்தலுக்கு பின் புதிய அரசு பொறுப்பேற்றதும் 2011-2012ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications